திங்கள், 13 பிப்ரவரி, 2023

சேலம் மாவட்ட தொல்லியல் தடயங்கள்

 

சேலம் மாவட்ட தொல்லியல் தடயங்கள்

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் M.A.Mphil.D.pharm
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்
                                     




பழங்காலத்தில் மனிதன் காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் வாழ்ந்த போது வேட்டையாட பல்வேறு கல்லால் ஆன கருவிகளை பயன்படுத்தினான். அவை பழைய கற்காலகருவிகள்,புதிய கற்கால கருவிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கருவிகள் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வாழ்வியல் முறைகளை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.மனிதன் இறந்த பின் என்ன நடக்கும் என்ற கேள்வி மனிதனுள் ஆதிகாலம் முதலே எழுந்து வந்துள்ளது. ஆரம்பத்தில் இறந்த மனிதனை அதே இடத்தில் விட்டு விட்டு உணவை தேடி அடுத்த பகுதிக்கு இடம் பெயர்ந்தான். நிலையாக விவசாயம் செய்ய துவங்கிய பின் ஒரே இடத்தில் தங்கி மனிதன் வாழத்துவங்கினான்.

    மனிதன் ஒரே இடத்தில் தங்கி வாழத்துவங்கிய பின் தன் கூட்டத்தில் இறந்த முக்கியமான தலைவனுக்கு நினைவுச்சின்னம் அமைக்கத்துவங்கினான்.நால்வகை நிலங்களுக்கும் ஏற்ப நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டன.  மலைப்பகுதியிலும் ,நிலப்பகுதியிலும் வெவ்வேறு வகையில் அடையாளச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. இவை ஈமச்சின்னன்கள் என அழைக்கப்பட்டன.உலகம் முழுக்க இத்தகைய ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.
 
கல்பதுக்கை,கற்குவை,கற்திட்டை,ஈமப்பேழை,குத்துக்கல்,முதுமக்கள்தாழி,தொப்பிக்கல்,தாய்தெய்வம்,நடுகற்கள் போன்றவை இத்தகைய ஈமச்சின்னங்களின் வகைகள் ஆகும்.மலையும் மலை சார்ந்த பகுதிகளில் கல்பதுக்கை,கற்குவை,கல்திட்டை குத்துக்கல் போன்ற ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டன. நிலப்பகுதியில் முதுமக்கள் தாழி,குத்துக்கல் போன்றவை அமைக்கப்பட்டன. இக்கட்டுரையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சில தொல்லியல் தடயங்களை காண்போம்.

மல்லூர் பகுதி தொல்லியல் தடயங்கள்
. எருமைநாயக்கன் பாளையத்தில் உள்ள பொன்சொரி மலையில் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கள ஆய்வை மேற்கொண்டனர்.அப்போது அம்மலையில் 2250 அடி உயரத்தில் தாமரைப்பாழி என்ற சுனைக்கு அருகே ஓர் கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டது.இதன் காலம் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.இது சங்ககாலத்துக்கு முந்தைய பெருங்கற்காலத்தை சார்ந்ததாகும்
.
     அக்காலத்தில் இறந்தவர்களை பூமியில் குழிதோண்டி புதைத்துவிட்டு நான்கு புறமும் பலகை கற்கள் வைத்து மேற்புறமும் ஒரு பலகைகல்லால் மூடி புறா கூண்டு போன்ற முறையில் அமைத்துவிடுவர் .அதில் அவர்கள் பயன்படுத்திய சில பொருட்களையும் வைத்து அடக்கம் செய்வர்.இம்முறைக்கு கல்திட்டை என்று பெயர்.இங்கு காணப்படும் இந்த கல்திட்டை ஒரே பலகைகல்லால் அமைக்கப்படாமல் சிற்சில துண்டுகற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.வடபுறம் உள்ள பக்கவாட்டுகல்லும் மூடும் கல்லும் சிதைக்கப்பட்டுள்ளது.மூடுகற்கள் ஐந்து துண்டுகற்களால் மூடப்பட்டுள்ளது
.
   பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க கல்பதுக்கை,கல்திட்டை,கல்வட்டம்,ஈமப்பேழை,கல்குவை,முதுமக்கள்தாழி போன்ற முறைகளை பயன்படுத்தி உள்ளனர்.இதே போன்ற கல்திட்டை ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   அம்மன் மலையில் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட கல்திட்டைக்கு அருகே இருபது அடி தொலைவில் சிதைக்கப்பட்ட நிலையில் ஓரு கற்குவையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப்பகுதியில் இருந்தவர்கள் இதன் அருமை தெரியாமல் இதை சிதைத்திருக்க கூடும்.பெருங்கற்காலத்தில் இறந்தவர்களை பூமியில் புதைத்து மூடிவிட்டு அந்த இடத்தை அடையாளப்படுத்த கூம்பு வடிவில் கற்களை அடுக்கி வைப்பர் .இந்த முறைக்கு கற்குவை என்று பெயர்.இதே போன்ற கற்குவை ஏற்காடு பகோடா பாயிண்ட் என்ற இடத்தில் காணப்படுகிறது.

   அம்மன் மலையின் அடிவாரத்தில் இருந்து 150 அடி உயரத்தில் ஒரு சுனையின் அருகே மேற்புறமுள்ள பாறையில் திருக்குறளில் அதிகாரம் 26ல் கொல்லாமையை வலியுறுத்தும் திருக்குறள் ஒன்று 6 வரிகளில் வெட்டப்பட்டுள்ளது..

1.தன்னூன் 
2.பெருக்கற்
3.குத் தான்பி
4.றி தூணுன்
5.பானெங்ங
6.ன மாளு மருள்

இந்த திருக்குறளின் காலம் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்
                                        

ஏற்காடு பகுதி தொல்லியல் எச்சங்கள்
கற்குவைகள்
:

                 2,500
ஆண்டுகளுக்கு முன் மனிதன் தன் கூட்டத்தில் இறந்தவருக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் கற்குவையாகும்.இவை பிரமீடு வடிவில் ஒன்றன் மீது ஒன்றாய் செவ்வக வடிவ கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இவை எகிப்தில் உள்ள பிரமீடுகளை போன்று அளவில் சிறியதாக உள்ளது. ஏற்காடு வெள்ளக்கடையிலிருந்து மோட்டூர் போகும் வழியில் மேலூர் கிராமத்தில் கல்திட்டையுடன் இணைந்த ஓர் கற்குவை கண்டறியப்பட்டது. மோட்டூர் கிராமம் சேட்டுப்பட்டி மலைப்பகுதியில் ஒரு கற்குவையும் குத்துக்கல்லும் உள்ளது.இந்த குத்துக்கல்லின் உயரம் 60 செ.மீ.மோட்டூர் கிராமத்தின் மலைப்பகுதியில் ராமர் கோயில் என்ற இடத்தில் பத்து கற்குவைகள் காணப்படுகின்றன. இவற்றில் 7 பெரிதாகவும் 3 சிறிதாகவும் உள்ளது
மிகப்பெரிய கற்குவை ஒன்று கல்திட்டையுடன் இணைந்து இங்கு கண்டறியப்பட்டது.  இதற்க்கு  ஒரு வாயிலும் அதன் உள்ளே புதிய கற்கால கருவிகளும் காணப்படுகின்றன. இதன் உயரம் 300செ.மீ, அகலம் 200 செ.மீ,முன்புற வாயில் 100 செ.மீ ஆகும். இதை இங்குள்ள மக்கள் ராமர் கோயில் என அழைக்கின்றனர். வருடம் ஒருமுறை இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடத்திலிருந்து மலை உச்சியில் 3 கி.மீ உயரத்தில் தங்கமலை என்ற இடத்தில் 7 கற்குவைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உயரம் 150 செ.மீ, சுற்றளவு 295 செ.மீ ஆகும்.
                         




கல்திட்டைகள்:

                       
இறந்தவர்களின் நினைவிடங்களில் கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. இவை மூன்று புறமும் பலகைகற்கள் வைக்கப்பட்டு மேலே ஒரு பலகைக்கல்லால் மூடப்பட்டு உள்ளன. இதற்கு முன்புறம் ஒரு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே புதிய கற்கால கருவிகள் உள்ளன. மக்கள் இதை வழிபடுகின்றனர். ஆத்தூர்  தாலுக்கா  கெராங்காடு, பெத்தநாயக்கன் பாளையம் தாலுக்கா   சேவூர் கிராமங்களில் இந்த கல்திட்டைகள் பாண்டியன் வீடு,குள்ளபாண்டி  வீடு, சின்ன பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது. ஆனால் ஏற்காடு பகுதியில் இவை ராமர் வீடு எனவும், திருவண்ணாமலைப்பகுதியில்  பாண்டவர் வீடு எனவும் அந்தந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.பழங்காலத்தில் குள்ள மனிதர்கள் இதில் வசித்ததாகவும் இவர்கள் நம்புகின்றனர்.ஏற்காடு பகுதியில் கல்திட்டைகள் கற்குவையுடன் இணைந்தே காணப்படுகிறது

பெத்தநாயக்கன் பாளையம் தொல்லியல் எச்சங்கள்

பெரிய
கல்வராயன் மலையில் உள்ள ஆத்தூர் வட்டம் கீழ்நாடு ஊராட்சி கெராங்காடு கிராமம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் கீழ்நாடு ஊராட்சி அடியனூர், சேம்பூர், போன்ற கிராமங்களில் சேலம் வரலாற்று ஆய்வுமையம்  மேற்புற கள ஆய்வை மேற்கொண்டது.அப்போது அக்கிராமங்களில் 21 கல்திட்டைகள், 10 கற்குவைகள் , புதிய கற்கால கருவிகள் மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இதில் 15 கல்திட்டைகள் ஓரளவு நல்ல நிலையிலும் 6 கல்திட்டைகள் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன ,கற்குவைகளில் 6 நல்ல நிலையிலும் 4 சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது
                                                                    




கல் திட்டைகள் :-*

இக்கிராமங்களில் காணப்படும் கல்திட்டையானது மூன்று புறம் துண்டுகற்களால் அடுக்கப்பட்டு மேற்புறம் ஓர் பலகை கல்லால் மூடப்பட்டுள்ளது. முன்புறம் மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் நான்கரை அடி, நீளம் 12 அடி, அகலம் 6 அடியாகவும் உள்ளது.. மக்கள் வசிப்பிடங்களில் உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்கால கருவிகளும், அந்த கருவிகளை வழுவழுப்பாக்க பயன்பட்ட பந்து வடிவ உருண்டை கல்லும் ,கூர் தீட்ட பயன்படுத்திய தேய்ப்பு கல்லும் காணப்படுகிறது, கல்திட்டையின் உள்ளே விநாயகர் சிலையும் உள்ளது, இது பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம்.. மக்கள் வசிப்பிடம் இல்லாத மலைக்குன்றில் உள்ள கல்திட்டைகளில் புதிய கற்கால கருவிகளோ விநாயகர் உருவமோ காணப்படவில்லை.

புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழுவில் முக்கியமான தலைவர்கள் , வீரர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக இது போன்ற கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. அவை மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன.அது பிற்காலத்தில் மருவி பாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. இங்குள்ள மக்களால் இவை கல்பாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு, ,குள்ள பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் பழங்காலத்தில் வாழ்ந்ததாகவும் அவர்களின் வீடுதான் இது என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

கற்குவை :-*

இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்துக்கு அருகே கற்குவைகள் அமைக்கப்பட்டன.இவை பிரமீடு போன்ற அமைப்பில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது, கெராங்காடு கிராமத்தின் அருகே உள்ள மலைக்குன்றின் அமைந்துள்ள பழமையான அவ்வையார் கோயில் அருகிலுள்ள பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கற்குவைகள் காணப்படுகின்றன. செவ்வக வடிவமான நன்கு வெட்டப்பட்ட கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக வட்ட வடிவில் அடுக்கப்பட்டு கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது..இவை சிறிய வடிலான பிரமீடுகளை போல் காட்சியளிக்கிறது .இதன் உச்சியில் செங்குத்தாய் ஓர் பலகைகல் வைக்கப்பட்டுள்ளது.. இக்கற்குவையின் அடிப்பகுதியின் சுற்றளவு 12 அடி, நடுப்பகுதி 9 அடி, மேற்பகுதி 6 அடியாக உள்ளது. மேலே உள்ள தனி பலகை கல் முக்கால் அடியாக உள்ளதுஇன்றும் கூட கிணறு வெட்டும் தொழில் செய்யும் போயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் இறந்தர்வர் நினைவிடங்களில் கற்குவை அமைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
                                              


குத்துக்கற்கள் :-*

இறந்தவர்கள் நினைவாகவும், அவர்களை அடக்கம் செய்த இடங்களை அடையாளப்படுத்தவும் குத்துக்கற்கள் வைக்கப்பட்டன..இவை ஒரே கல்லில் கூம்பு கல்லாகவோ அல்லது பலகை கல்லாகவோ வைக்கப்பட்டன. கெராங்காடு கிராமத்தில் இருந்து குன்றின் மீதுள்ள அவ்வையார் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஏராளமான குத்துக்கற்கள் காணப்படுகின்றன..இவை ஒரே ஒரு பலகை கல்லால் அமைக்கப்பட்டுள்ளன..இந்த மலைப்பாதையில் செருப்பு போட்டுக்கொண்டு நடக்க ஊர் மக்கள் அனுமதிப்பதில்லை..இந்த குன்றை புனிதமாக கருதுகின்றனர்.

புதிய கற்கால கருவிகள் :-*

கெராங்காடு,சேம்பூர்,அடியனூர் போன்ற மலைக்கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. இவை வேறு வேறு வடிவங்களில் அமைந்துள்ள கைக்கோடாரிகள் ஆகும்.இதன் ஒரு முனை கூராகவும் மறுமுனை தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக்கிழிக்கவும் தட்டையான முனை வெட்டவும் பயன்பட்டுள்ளது. இந்த கருவிகள் எளிமைமையாய் பயன்படுத்துவதற்கு ஏற்ப கைக்கு அடக்கமாய் செய்யப்பட்டுள்ளன. ஒரு அடி உயமுள்ள கற்கோடாரிகளும் இங்கு காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.. பழைய கற்கால கருவிகள் கரடு முரடாக இருக்கும்.இந்த புதிய கற்கால கருவிகள் வழுவழுப்பாக உள்ளன,இதை வழுவழுப்பாக மாற்ற பயன்பட்ட கல்பந்துகளும்,கூராக்க பயன்பட்ட தேய்ப்பு கல்லும் கல்திட்டையின் உள்ளே காணப்படுகின்றன.
                         


அவ்வையாரம்மன் கோயில்

பெரிய கல்வராயன் மலையில் கீழ்நாடு என இப்போது அழைக்கப்படும் பகுதி 15ஆம் நூற்றாண்டில் கள்ளர் நாடு என அழைக்கப்பட்டுள்ளது.கெராங்காடு என்ற ஊர் கருங்காடு என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டு அவ்வையார் கோயில்கள் உள்ளன. கெராங்காடு ஊருக்கு அருகே புதிய கோயிலும் 2 கி.மீ .தொலைவில் உள்ள குன்றில் பாழடைந்த நிலையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டசிதைந்த நிலையில் ஓர் அவ்வையார் கோயிலும் உள்ளது. பழைய கோயிலில் இப்போது அவ்வையார் சிலை இல்லை.பல வருடங்களுக்கு முன் இங்குள்ள சிலைகளை திருடர்கள் திருடி செல்ல முயற்சித்ததால் ஊர் மக்கள் பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துள்ளனர். கார்த்திகை தீபம் அன்று மட்டும் அவ்வையார் சிலையை இங்கு கொண்டு வந்து வைத்து வழிபடுகின்றனர்.கார்த்திகை தீபம் அன்று மலை உச்சியில் உள்ள கொப்பரை மூலம் மகாதீபம் ஏற்றி வழிபடுகின்றனர்..திருவண்ணாமலை தீபத்தை பார்த்த பின்னரே இங்கு தீபம் ஏற்றுவது நடைமுறையாக உள்ளது.சேலம் அருகே உத்தமசோழபுரம் என்ற ஊரில் உள்ள கரபுரநாதர் கோயிலில் பழமையான ஓர் அவ்வையார் சிலை உள்ளது.இந்த இரண்டு அவ்வையாருக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பது ஆய்வுக்குரியது.

இசைக்கற்கள் :-*

மலைமீதுள்ள அவ்வையார் கோயிலில் உள்ள சிலைகளை திருடர்கள் திருட முயன்றபோது அவர்கள் பாறையாய் மாறிவிட்டதாய் ஊர்மக்கள் சொல்கிறார்கள். அந்த பாறைகளை ஆய்வு செய்த போது அவை இசைக்கற்கள் என தெரிய வந்தது..அந்த பாறைகளை தட்டும்போது உலோகத்தை தட்டுவது போல் ஒலி வருகிறது, சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம்,பேளூர்,அயோத்தியாப்பட்டினம் போன்ற ஊர்களில் உள்ள கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன,அவற்றை தட்டினால் இனிமையான ஓசை வரும். அது போன்ற இசைத்தூண்களை உருவாக்க இது போன்ற பாறைகள் பயன்பட்டன.

கல்வெட்டுகள்:
             


கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன..ஒன்று மலைமீதுள்ள அவ்வையாரம்மன் கோயிலில் உள்ளது.அது படிக்க முடியாதபடி சிதைந்து காணப்படுகிறது..மற்றொன்று ஊரின் மத்தியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே பலகை கல்லில் வெட்டப்பட்டுள்ளது.கல்வெட்டின் மேற்புறம் பெருமாளின் சின்னமான சங்கு , சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
 
இது 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் விய வருடம் வைகாசி மாதம் 27ந்தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூசைகள் செய்ய கள்ளர் நாட்டை (கீழ்நாடு) சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கரையப்பக்கவுண்டர் , அன்னியப்ப கவுண்டர் , ஆகிய இரு தலைவர்களும்
நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது ஆகும். இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூசையும் கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் .
இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இத்தானத்துக்கு அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது..இப்பகுதி கள்ளர் நாடு என கல்வெட்டில் குறிப்பிடப்படுவதால் அருகே வணிக வழி பாதை ஒன்று இருந்திருக்க வேண்டும்,

வாழப்பாடி வட்ட தொல்லியல் தடயங்கள்
              




 சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான கோவில் வளாகத்தில் நுாற்றுக்கும் அதிகமான, 6,000 ஆயிரம் பழைமையான புதிய கற்கால கருவிகளை வைத்து பாதுகாத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருவதை சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினர் கண்டறிந்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலை கிராமங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்னரே பழங்கால மக்களின் வாழிடமாக இருந்ததை அப்பகுதியில் கிடைத்து வரும் புதிய கற்கால கருவிகள் மற்றும் கல்வெட்டுகள், நடுகற்கள் ஆகியவை உறுதிப்படுத்தி வருகின்றன.

ஏற்கனவே, கல்வராயன்மலை சேம்பூர், அத்திரிப்பட்டி, கிராங்காடு, குன்னுார் மற்றும் அருநுாற்றுமலை பள்ளிக்காடு, சிறுமலை உள்ளிட்ட  கிராமத்தில் புதிய கற்கால கருவிகளும், இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் ஈமச்சின்னங்களான கற்திட்டைகள் மற்றும் கற்குவைகளும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தினரால் கண்டறியப்பட்டது

 . அந்த கிராமத்திலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில், இரு நந்தி சிலைகள், ஒரு பிள்ளையார் சிலை மற்றும் நுாற்றுக்கும் அதிகமான கைக்கோடாரி வகையை சேர்ந்த புதிய கற்கால கருவிகளையும் வைத்து பாதுகாத்து வருவதையும், அவற்றை இன்றளவிலும் வழிபட்டு வருகின்றனர்.

 
பழங்காலத்தில்
நாடோடியாக வாழ்ந்த மனிதன் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகள் அருகில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் நிலையாகத் தங்க ஆரம்பித்தான். ஆரம்ப கட்டத்தில் வேட்டையாட பயன்படுத்திய ஒழுங்கற்ற நிலையில் இருந்த கற்கருவிகளை தேய்த்து வளவளப்பாக மெருகூட்டிப் பயன்படுத்தினான். அக்காலமே புதிய கற்காலம் எனவும், அந்த காலகட்டத்தில் மனிதன் பயன்படுத்திய கருவிகளை புதிய கற்காலக் கருவிகள் எனவும் வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை மற்றும் கல்வராயன் மலைப்பகுதியில் கி.மு.2000 ஆண்டு வரை புதிய கற்காலம் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. ஏராளமான கிராமங்களில் நீர்நிலைகளில் சிதறிக்கிடந்த பழங்கால மனிதர்கள் பயன்படுத்தி புதிய கற்கால கருவிகளை சேகரித்து கோவில்களில் வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த அருநுாற்றுமலை ஆலடிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெலாப்பாடி மலை கிராமத்தில் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வைத்து மக்கள் வழிபட்டு வரும் புதிய கற்கால கருவிகள் சிறிய கைக்கோடாரிகள் வகையை சேர்ந்ததாகும். ஒருபுறம் கூராகவும் மற்றொறுபுறம் தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக் கிழிக்கவும் தட்டையான பகுதி வெட்டவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் .

சிறுமலை கல்வெட்டு
                                                                           




சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அருநூத்து மலைப்பகுதியில் உள்ள சிறுமலை என்ற மலைக்கிராமத்தில் கி.பி.1202 ஆண்டு சோழர் கால நடுகல்(வீரக்கல்)
  மாரியம்மன் கோயில் அருகே உள்ள வயலில் இருந்து கண்டறியப்பட்டு சேலம்வரலாற்று ஆய்வு மையத்தால் ஆய்வு செய்யப்பட்டது.

கி.பி.1202 ஆம் ஆண்டு சோழ மன்னர் மூன்றாம் குலோத்துங்கனின் 24 ஆம் ஆட்சி ஆண்டில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. மொத்தம் 14 வரிகளில் எழுத்துக்கள் உள்ளது. கல்வெட்டில் காணப்படும் சிறுமலை என்ற பெயரிலேயே 814 ஆண்டுகள் கழித்தும் இந்த ஊர் சிறுமலை என்ற அதே பெயரில் அழைக்கப்படுகிறது.12 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் கீழ் ஒரு குறுநில நாடாக ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாடு இருந்தது.இந்த மகதை நாட்டின் எல்லைக்குள் சிறுமலை கிராமம் இருந்துள்ளது.

மகதை நாடாழ்வான் என்பவர் அப்போது மகதை நாட்டின் மன்னராக இருந்துள்ளார்.இவரின் பிரதிநிதியாக சேலஞ்சுற்றி என்பவர் சேலம் பகுதிக்கு பொறுப்பு வகித்துள்ளார்.மகதைநாட்டு சிறுமலைப்பகுதியில் இருந்த தோட்டப்படப்பை என்ற பகுதியை சேர்ந்த அரணமுடையான் புயிலன் சேந்தனான கேசஞ் என்பவன் எதிரிகள் தன் நாட்டை அழிக்க படையெடுத்து வந்தபோது அந்த படையை தடுத்து நிறுத்தினான்.அப்போரில் அவனும் இறந்து விட்டான்.தன் நாட்டுக்காக உயிரை கொடுத்த அந்த வீரனுக்காக ஒரு நடுகல் வைக்கப்பட்டு அதில் இந்த செய்தி வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டின் மேற்புறம் சற்றே சிதைந்துள்ளது.இதில் வீரனின் உருவம் ஏதும் காணப்படவில்லை.அவன் போரிட்ட எதிரி யார் என்றும் இதில் குறிப்பிடப்படவில்லை.

    ஆறகழூர் பகுதியில் மகதை நாடாழ்வான் என அழைக்கப்படும் பொன்பரப்பியவாணகோவரையனின் பல கல்வெட்டுக்கள் உள்ளது.
சிறுமலையில் இந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டதின் மூலம் 12 ஆம் நூற்றாண்டில் மகதை நாட்டின் எல்லை கல்வராயன் மலை வரை பரவி இருந்ததை அறிய முடிகிறது. சிறுமலையில் உள்ள சிவன் கோயிலில் சில கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன ஆனால் அவை கோயில் திருப்பணியின் போது கோயிலின் அடிப்பகுதியில் வைத்து கட்டப்பட்டு விட்டதால் சில வரிகள் மட்டுமே பூமிக்கு வெளியே தெரிகிறது.

  இங்குள்ள பிள்ளையார் கோயிலில் சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பத்துக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ளன.இதன் மூலம் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புதிய கற்காலத்தில் இது மக்களின் வாழ்விடப்பகுதியாய் இருந்தது உறுதியாகிறது.

 


தலைவாசல் வட்டார தொல்லியல் தடயங்கள்
.
                                                      




சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆறகழூர் பொன்.வெங்கடேசன் , தலைவாசல் அருகே கல்வராயன் மலையில் உள்ள மேல்பாச்சேரி ,தாழ்பாச்சேரி கிராமகளில் ஆய்வுகள் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள சிறு விநாயகர் கோயிலில் 50 க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டன. இக்கருவிகள் மூலம் முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்கை நிலையை அறிய முடிகிறது.

புதிய கற்காலமக்கள்

ஆதிமனிதன் காடுகளில் வாழ்ந்த போது வேட்டையாட கற்களால் ஆன கருவிகளையும் உறுதியான மரக்குச்சிகளையும் பயன்படுத்தி வந்தான். தொல் பழங்காலமானது பழைய கற்காலம், நுண்கற்காலம், புதியகற்காலம், பெருங்கற்காலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கிடைத்த கற்கருவிகள் புதிய கற்கால வகையை சேர்ந்தது. புதிய கற்காலமானது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது. பழைய கற்காலத்தில் வழக்கிலிருந்த கரடு முரடான கற்கருவிகளை விடுத்து நன்கு தேய்த்து வழவழப்பாக்கி மெருகேற்றிய கற்கருவிகளை பயன்படுத்திய காலத்தை புதிய கற்காலம் என அழைக்கின்றனர். இக்காலத்தில்தான் மனித இன வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.புதிய கற்கால மக்கள் தனக்கென ஒரு குடியிருப்பு பகுதியை உருவாக்கிக்கொண்டு ஓரிடத்தில் நிலையாக வாழ தலைப்பட்டனர்

.இவர்கள் குழி வீடுகளிலும் வட்டம் மற்றும் நீள்வட்ட வடிவிலான புல்வேய்ந்த கூரைவீடுகளிலும் வசித்தனர் என்பதை பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்) மற்றும் மயிலாடும்பாறை (கிருஷ்ணகிரி) அகழ்வாய்வுகள் தெளிவாக்குகின்றன. இவர்கள்தான் முதன் முதலில் வேளாண்மை செய்ய ஆரம்பித்தனர் என கருதலாம். பையம்பள்ளி அகழ்வாய்வில் மக்கிய நிலையில் கொள்ளு,கேழ்வரகு,பச்சைப்பயிர் ஆகிய தானியங்கள் கிடைத்துள்ளன. வேட்டையில் நிறைய விலங்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கற்காலகருவிகளை நட்டு வழிபட்டுள்ளனர். இந்த வழக்கம் இன்று வரை கூட தொடர்கிறது.இக்கால மனிதர்கள்தான் முதன்முதலில் இறந்தவர்களை தன் வீடுகளுக்கு அருகே அடக்கம் செய்யும் முறையை ஆரம்பித்தனர்.கல்வராயன் மலை அறுநூத்துமலையில் வாழும் மக்களிடம் இன்று வரை இந்த வழக்கம் தொடர்கிறது.இறந்தவர்களை இவர்கள் தெய்வமாகவும் வணங்கினர்.

புதிய கற்காலகருவிகள்
                                  



நன்கு வழவழப்பாக தேய்க்கப்பட்ட புதிய கற்காலகருவிகள் வேட்டையாடவும் கொட்டைகளை நசுக்கவும்,தானியங்களை அரைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கைக்கோடாரிகள்,அம்மிக்கல்,குழவிக்கல்,கூர்முனைக்கருவிகள்,கத்திகள்,வெட்டுக்கருவிகள்,கிழிப்பான்கள்,தேய்ப்புக்கற்கள்,போன்ற வடிவங்களில் இவை கிடைக்கின்றன.
மேல்பாச்சேரி கிராமத்தில் ஒரு விநாயகர் சிலை அருகே 18 புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. இதில் 11 நல்ல நிலையிலும் 7 சற்று சிதைந்த நிலையிலும் உள்ளது.இவற்றின் நீளம் 15 செ.மீ அகலம் 10 செ.மீ ஆகும். 33 செ.மீ நீளமுடைய குழவிக்கல் ஒன்றும் காணப்படுகிறது.இக்கருவிகள் இன்றும் இக்கிராம மக்களின் வழிபாட்டில் உள்ளது. வேட்டையாடும் வழக்கம் குறைந்து விட்டாலும் திருவிழா காலங்களில் இக்கருவிகளை சுத்தம் செய்து வழிபடுகிறார்கள். தாழ்பாச்சேரி கிராமத்தில் ஒரு மரத்தின் அடியில் உள்ள விநாயகர் சிலை அருகே முப்பதுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் உள்ளன. விநாயகர் சிலைகள் பிற்காலத்தில் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம். இக்கிராமங்களின் அருகே உள்ள ஓடைகளிலும் விளைநிலங்களிலும் கற்கருவிகள் கிடைப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேல்பாச்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த துர்க்கை, காளி சிற்பங்கள் ஒரே பலகை கல்லில் புடைப்பாக செதுக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளது.