ஞாயிறு, 17 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள் பெரியேரி எலி கல்வெட்டு

பெரியேரி எலி கல்வெட்டு பின்புறம்

பெரியேரி கல்வெட்டு முன்புறம்

எலி

மைப்படி

இந்து நாளிதழ் செய்தி

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 4
பெரியேரி எலிக்கல்வெட்டு

அண்ணே இந்த மருந்தை கொடுங்க..
இந்த மாத்திரை 3 வேளைக்கு சாப்பிட்ட அப்புறம் கொடுங்க..
சீக்கிரம் நல்லாயிடுமா..
டாக்டர் செக் பண்ணிதானே எழுதியிருக்கார். சாப்பிடுங்க சரியாயிடும். அப்புறம் உகளுக்கு தெரிஞ்சி எங்கியாவது கல்வெட்டு இருக்கா..?
கல்வெட்டா...? நம்ம பெரியேரி வண்ணான் குளம் பக்கத்துல ஒரு கல்லுல எழுதியிருக்கு வேணா போய் பாருங்க...
அது எவ்வளவு முக்கியமான கல்வெட்டுன்னு அப்ப எனக்கு தெரியல. இது வரை நான் பார்த்த கல்வெட்டுலே பெரிய கல்வெட்டு அதுதான்.இது எதுவுமே தெரியாம பெரியேரி கிளம்பி போனேன்.
வண்ணான் குளம் அருகே தேடினேன். கல்வெட்டு கிடைக்கல..கொஞ்சம் உள்ள போய் தேடலாமான்னு யோசிட்டு உள்ள போனேன். நமக்கு தெரிந்தவர் காடுதான் அது
அண்ணே இங்க கல்வெட்டு ஒண்ணு இருக்குன்னு சொன்னாங்களே அது எங்க இருக்கு..
அதுவா...பல தலை முறையா அது இங்கதான் இருக்குன்னு கூட்டிகிட்டு போனார். இந்த கல்லுக்கு அடியில் புதையல் இருக்குமுன்னு பேசிகிறாங்க..
இருக்குமா..?
அதெல்லாம் சும்மா கதைண்ண இது சூலக்கல்லு நிலம் தானம் செய்த எல்லைக்கல்லு...
விளைநிலத்தில் பயிர்களுக்கு நடுவே பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமா அந்த கல்வெட்டு நின்று கொண்டிருந்தது.
நாலு பக்கமும் எழுத்துக்கள் இருந்துச்சி..நாலு பக்கமும் எலி உருவம் இருந்தது ரொம்ப புதுசா இருந்துச்சி..வழக்கம் போல் படம் எடுத்திட்டு கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா Mangai Ragavan ஆகியோருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள் மூலம் படி எடுக்கப்பட்டு கல்வெட்டு படிக்கப்பட்டது. எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு தமிழகத்தில் கண்டறியப்படுவது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும். வாணகோவரையர்கள் ஆறகழூரை தலை நகராக கொண்டு மகதை நாட்டை ஆண்டு வந்தனர்.இவர்கள் மாவலி வம்சத்தில் வந்தவர்களாய் சொல்லிக்கொண்டனர் .அது தொடர்பான புராண கதை மூலம் பெருச்சாளியை குல சின்னமாக கொண்டனர். ஆனால் அதற்கு ஆதாரம் எங்கும் கிடைக்காமல் இருந்தது . இந்த கல்வெட்டு மூலம் அதற்கு சான்று கிடைத்துள்ளது. ஆய்வாளர் திரு பூங்குன்றன் ஐயா பண்டை தமிழகத்தில் யானை குலம் எலி குலம் என்ற இரு அரச மரபுகள் இருந்தன. இதில் யானை குலம் எலி குலத்தை போரில் வென்றது என குறிப்பிடுகிறார். அந்த எலி குலம் வாணர் குலமாக இருக்கலாம் என கருதுகிறார்.
2017 ஆவணத்தில் வெளியிடப்பட்டது
கல்வெட்டு வாசகம்
பெரியேரி எலி உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கயற்கரசி ராகவன் --விழுப்புரம்
ஆறகழூர்- பொன்.வெங்கடேசன்
இடம் : சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெரியேரி கிராமத்தில் வண்ணான் குளம் என்ற குளத்துக்கு பின்புற வயலில் உள்ளது
காலம் : 12-13 ஆம் நூற்றாண்டு-பாண்டியன்
செய்தி :
இந்த கற்பலகையில் மொத்தம் இரண்டு தானங்களை குறிக்கும் செய்தி உள்ளது... இந்த கற்பலகையின் நான்கு புறங்களிலும் சூலங்கள் வெட்டப்பட்டுள்ளது.
முன்புறம் பூமாதேவியின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.அதற்க்கு முன்பாக முக்காலியின் மீது இரு செல்வ குடங்கள் காட்டப்பட்டுள்ளது. இக்கல் பலகையின் ஏனைய மூன்று பக்கங்களிலும் எலிச்சின்னம்(இலச்சினை) வெட்டப்பட்டுள்ளது…தமிழகத்தில் எலி சின்னம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.பின்புறம் உள்ள இரண்டாவது கல்வெட்டின் ஊடே மூசிகா(பெருச்சாளி)வாகனம் வெட்டப்பட்டுள்ளது.
இக்கற்பலகையில் உள்ள இரு கல்வெட்டுக்களும் ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் என்று துவங்குகிறது. உயிர்நம்பி அழகியானவன் என்பவர் சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையார் என்ற கோயிலுக்கு அமுதுபடிக்கும் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பதற்க்கும் தேவதான இறையிலியாக குலசேகர பெரியேரி யின் கீழ் காட்டை திருத்தி இரண்டு மா நன்செய் நிலமும் ,இதனால் வரும் அனைத்து வரி ஆதாயங்களும் ஆவணி மாதம் 11ஆம் நாள் முதல் இறையிலியாக தந்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
குலசேகரபாண்டியன் காலத்தில் இவனது பாண்டிய மண்டலத்தை சேர்ந்த முத்தூற் கூற்றத்து கப்பலூரை(உலகளந்த சோழநல்லூர்) சார்ந்த ஆதித்த கணபதி ஆள்வான் காடு வெட்டி என்பவர் இக்கல்வெட்டை பதிவு செய்துள்ளார்
கல்வெட்டு பாடம் :
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர்
2.நிவா வாற்றுக்கு வடகரையில் பிள்ளையார் சொ
3. ன்ன வண்ண ஞ்செய்வார் கோயில் ஆண்டார் உ
4.பய யழகியானான் தவஸ உ-யிர் நம்பிக்கு
5.இப்பிள்ளையாற்கும் அமுதுபடிக்கும் இக் கொயி
6. ல் தான் வைக்கிந் தண்ணீர் பன்(த)ர்க்கும் தெவ
7. தாந இறையிலியாக பெரிய ஏரியான குலசெ
8.கரந் பெரியஏரியில் கடமைப்.பற்று நஞ் செய் நில
9.தில் ஒன்பதாவது தன் காணியில் காடுவெட்டித்தி
10. ருத்தின நிலத்திலே ரண்டு மா நிலம் அனைத்தாதாயங்
11.களும் உட்பட்ட பதினொன்றாவது ஆவணி மாதம் முத
12.ல் இறை இலியாகத் தந்தோம் இப்படிக்கு இ ஓலை
13.பிடிபாடாகக் கொண்டு தனக்கும் தன்வர்க்கத்தார்க்
14.கும் சந்திரராதித்த வரையும் காணியாக்கி கல்லிலு
15.ம் செம்பிலும் வெட்டி கொள்க இப்படிக்கு இவை
16.பாண்டி மண்டலத்து முத்தூற்க் கூற்றத்து
17.க் கப்பலூரான உலகளந்த சொழனல்லூர் ஆ
18.தித்தன் கணவதி ஆழ்வானான் காடுவெட்டி எ
19.ழுத்து உ
2.2 மேற்படி எலி கல்வெட்டின் பின்புறம்
செய்தி :
மேற்படி சொன்ன வண்ணம் செய்வார் பிள்ளையாருக்கு அமுதுபடிக்கும் தண்ணீர் பந்தலுக்கும் குலசேகர பெரிய ஏரியின் வாய்காலுக்கு வடக்கே இரண்டாயிரம் குழி நிலம் இறையிலியாக கொடுக்கப்படுல்ளது.இதையும் கணபதி ஆழ்வாளன் காடுவெட்டியால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வெட்டு பாடம்:
பெரியேரி சூலக்கல் பின்புறம்(மிகுதியாய் சிதைந்த கல்வெட்டு)
------------------------------------------------
1.ஸ்வஸ்திஸ்ரீ அருளிச்செயல் ஆறகளூர் நிவா
2.வாற்று க்கு வடகரை யில் பிள்ளையார் சொன்ன
3.வண்ணெஞ் செய்(சிற்பம்) வா
4.ர்க் கொயிலில்(சிற்பம்) ஆண்டார் இ
5.ப்பட்ட யழகியானான் . .
6. (சிற்பம்) உயிர் நம்பிக்கும்
7.க்கு அமுதுபடிக்கும் இத்திரு வா . . . .
8.ணீர் வைக்கவும் குலசேகரன் பெரிய ஏரி
9. - வாய்காலுக்கு வடக்கும் இவ் . . .
10.ஏரி வடக்கு மேற்கும் தேவதான …இ
11க் காடு வெட்டிப் பயிற் செய்து . . நஞ்
12.செய் குழி யிரண்டாயிரத்துக்குக் குழி உ
13.ள்ளிட்ட அனைத்தாதாயமும் உட்பட . . . . சந்திராதித்
14.தவரை தேவதான இறையிலியா . . . . . இப்படி
15.க்கு கல்லிலுஞ் செம்பிலும் வெட். . . .
16.இப்படிக்கு இவை பாண்டிய மண்டலத்து முத்தூற்று
17.கூற்றத்துக் கப்பலூரான உலகளந்த சோழ னல்லூர்
18.ஆதித்தன் கணவதி ஆழ்வாளன் காடுவெட்டி எழுத்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக