வியாழன், 21 டிசம்பர், 2017

ஆறகழூர் கல்வெட்டுகள்

ஆறகழூர் கல்வெட்டுகள் எண் 5


நத்தகரை கல்வெட்டு
2 வருடங்களுக்கு முன் ஒரு ஞாயிற்று கிழமை தொல்லியல் தேடலுக்கு கிளம்பினேன். ஆறகழூருக்கு பக்கத்தில் நத்தக்கரைன்னு ஒரு ஊர் அந்த ஊருக்கு போனேன். அந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சு...? தெரிஞ்சிக்க அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்..
அய்யா இந்த ஊருக்கு நத்தகரைன்னு எப்படி பேர் வந்துச்சி..?
அதுவா..ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ராசாங்களுக்குள் பெரிய சண்டை நடந்திச்சி. அப்ப நெறைய பேரு இங்க போரில செத்து போய் ரெத்தம் ஆறா ஓடிச்சாம்.அதனால ரத்தகரைன்னு பேரு வந்துச்சாம். காலபோக்குல ரத்தகரை மருவி நத்தகரைன்னு ஆயிடுச்சி . இந்த சண்டையில கை,காலு போனவங்க, காயம் பட்டவங்களுக்கு மலைக்கு பக்கத்துல நிலம் கொடுத்து அங்கியே தங்க வச்சாங்க. அந்த ஊருதான் இப்ப இருக்குற புத்தூர்.என சொல்லி முடித்தார்.
இன்னொரு பெரியவரிடம் கேட்டேன். அவர்
கள ஆய்வின் போது
அந்த காலத்தில் இது ஆறகழூரின் ஒரு பகுதியாதான் இருந்துச்சி..ஆறகழூர் தலைநகராக இருந்திச்சி..கோட்டைக்குள்ள ராசா மந்திரி அப்புறம் முக்கியமான ஆளுங்க குடியிருப்பாங்க..சாதாரண ஆட்கள் குடியிருக்க நத்தம் அப்படின்னு ஒரு பகுதியை ஒதுவாக்குவாங்க. அப்படி ஆறகழூர் நத்தத்துக்கு கரையா இந்த பகுதி இருந்ததால் நத்தகரைன்னு பேர் வந்துச்சி...
சரிங்க இங்க ஏதாவது கல்வெட்டு இருக்கா..?
பஸ்ஸ்டாண்டு கொடி கம்பத்துகிட்ட ஒரு கல்லு இருக்கு போய் பாருங்க..
பறந்துகிட்டு போய் பாத்தேன்...அச்சச்சோ அங்க இருந்தது ஒரு கோமாரிக்கல்லு..
ஏமாத்ததோடு திரும்பி கொஞ்சதூரம் வந்தேன்.அப்ப என் பள்ளித்தோழன் இப்ப நடுநிலைப்பள்ளி தலமை ஆசிரியர் மனோகரன் நின்னுகிட்டு இருந்தார்..
என்ன வெங்கடேசு இவ்வளவு தூரம். உன்னை பாத்து எவ்ளோ நாளாச்சி..நல்லாருக்கியா..?
நல்லாருக்கேன் மனோகரு. நான் இப்ப கல்வெட்டை தேடிகிட்டு இருக்கேன்
அப்படியா எங்க வீட்டுக்கு பின்னாடி ஒரு கல்லு இருக்கு வந்து பாரு...
இருவரும் அந்த இடத்துக்கு போனோம். சாய்ந்த நிலையில் செடி கொடிகளுக்கு நடுவே ஒரு கல்வெட்டு..
படி எடுக்கும் பணியில்
கல்வெட்டு மைப்படி
அதன் பிம்பத்தை காமிராவின் கண்களுக்கு சாப்பிட கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினேன். விழுப்புரம் வீரராகவன் ஐயா மங்கை மேடத்துக்கு தகவல் தெரிவித்தேன். சில வாரங்களில் அந்த கல்வெட்டு படிக்கப்பட்டு செய்தி நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.2016 ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டது. சிலநாள் முன்பு அந்த கல்வெட்டை பார்க்க சென்றபோது செடி கொடிகளுக்குள் மறைந்து கிடந்தது.
கல்வெட்டு வாசகம்
நத்தக்கரை கிராமபூதான கல்வெட்டு
சி.வீரராகவன்
வீ.மங்கையற்கரசி ராகவன்
விழுப்புரம்
ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
இடம் :
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகே
நத்தக்கரையில் , ஆசிரியர் மனோகரன் என்பவர் வீட்டுக்கு பின்புறம் தோட்டத்தில் உள்ள பலகை கல்வெட்டு
காலம் : 16 ஆம் நூற்றாண்டு பொ.ஆ .1585
செய்தி :
சுபமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என நட்சத்திர குறிப்புகளோடு இக்கல்வெட்டு ஆரம்பமாகிறது.கல்வெட்டின் இருபுறங்களிலும் 49 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.
திருவானைக்கா ஸ்ரீ மது ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்திரசேகர உடையார் அய்யன் அவர்களுக்கு மகதை மண்டலம் மலாடாகிய சனநாத வளநாட்டு நிவா(வஷிஷ்ட) நதிக்கு தென்கரை ஆற்றூர் கூற்றத்து ஆத்தூர் நாட்டை சேர்ந்த நாட்டவர்களுக்கு கிருஷ்ணப்ப நாயக்கர் அய்யனின் நினைவாக ஆறகளூர் திருகாமீசுரமுடைய பெரியம்மைக்கு தானபூர்வமாக நத்தகரை கிராமத்தை தாரை வார்த்து கொடுத்ததை இக்கல்வெட்டு குறிக்கிறது..
கல்வெட்டு பாடம் :
1.ஸ்பமஸ்து ஸ்வஸ்திஸ்ரீ சகா
2.ப்தம் 1507 இதன்மேல் செ
3.ல்லா நின்ற பார்திப ஸம்பத
4.ஸரத் மீள ஞாயிற்று அமர ப
5.ட்சத்து ஷஷ்டியும் சோம வார
6.மும் பெற்ற அநுஷ நட்ஷிரத்து
7.நாள் திருவாணைக்கா ஸ்ரீ மது
8.ஸ்ரீ கண்டன் ஆகாசவாசி ஸ்ரீ சந்
9.திர சேகர உடையார் அய்யன் அவ
10.ர்களுக்கு மகதை மண்டலம் மலா
11.டாகிய ஜனநாத வளநாட்டு ஆ
12.--- தென்கரை ஆற்றூர் கூற்ற
13.த்து ஆற்றூர் நாட்டு நாட்டவர்கள் கி
14.ராம பூதாந தம்பஸாசநம் குடுத்தபடி
15.ஞாவாற்றுக்கு வடக்கு தலைவாசலுக்கு
16.கிழக்கு நாவர் குறிச்சிக்கு தெற்கு பெரி
17.ஏரிக்கு மேற்கு நெத்தக்கரை கிராமம்
18.ஒன்றும் ஆறகளூர் திருக்காமீஸ்வர பெ
19.ரியம்மைச் சந்நதியிலே கிருட்டிணப்(ப)
20.நாயக்கர் அய்யனுக்கு புண்ணியமாக
21.ஹிர ளொதக தாறா பூறுவமாக
22.தாரைவாத்து குடுத்தப்படியாலே யி
23.ந்த கிராமத்து நான்கெல்லையில் உட்
24.பட்ட நஞ்சை புஞ்சை கரை முதலிய பு
25.வியும் நியா –அட்டபோகமாக சுவா
26.த-யங்களுக்கும் உட்பட்டு
3.2 மேலது நத்தக்கரை கல்வெட்டின் பின் பக்கம் அதே செய்தியின் தொடர்ச்சி
கல்வெட்டு பாடம் :
1..ஏற்க ஸாத்திய மாக த-காத
2.நியம விக்கிரயங்களுக்கும்
3.க்ரையமாக சர்வ மானியமாக
4.அனுபவித்துக் கொள்ளக்கட
5.வார்களாகவும் என்று ஸ்ரீ மது
6.ஸ்ரீகண்ட ஆகாசவாசி ஸ்ரீ
7.சந்திரசேகர குரு உடையார் அய்
8.யன் அவர்களுக்கு ஆற்றூர் நாட்டு
9.நாட்டவர்கள் குடுத்த கிராம
10.பூதாந தன்ம சாஸனம்
11.தான வாலஞ்யோம் ககியேதா
12.நா மேநு பாலநாய
13.தாநாத் ஸக வாகோதி
14.கைலாசநாதச் சுதம் பாதியும்
15.இந்த தன்மதுக்கு அகிதம்
16.பண்ணினவன் கெங்கைக்
17.கரையிலே காறம் பசு
18.வை கொன்ற தோஷத்தி
19.லே போகக் கடவனாகவும்
20.இப்படிக்கு நாட்டவர்கள் செய
21.ல் படிக்கு நாட்டு கணக்கு
22.ஆற்றூர் நாட்டு வெளாகா
23.மீசுவரன் எழுத்து.
20/112/2017 இன்றைய நிலையில் கல்வெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக